குதிரைப்பேரம் உச்சம் தொட்டதாலேயே மஹிந்தவால் 113 ஐ பெறமுடியாமல்போனது! மைத்திரி பரபரப்பு தகவல்
” 500 மில்லியன் ரூபாவரை குதிரைப்பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல்போனது. எம்.பிக்களை ஏலமிட்டிருக்காவிட்டால் இந்நேரம் மஹிந்த பிரதமராகியிருப்பார். அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்காது.”
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ‘டெய்லிமிரர்’ இணையததளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் , இது குறித்து மேலும் கூறியதாவது,
” நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம் பேசுதலில் ஏற்பட்ட விலை அதிகரிப்பாலேயே மஹிந்தவால் பெரும்பான்மையை பெறமுடியாமல்போனது. மனு கோரல் (டென்டர்) போன்று எம்.பிக்கள் ஏலமிடப்பட்டனர்.
சில உறுப்பினர்கள் 500 மில்லயன் ரூபாய் கோரியதாக எனக்கு தகவல் கிடைத்தது. மஹிந்தவுக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு அதிகளவான விலைகளே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தினார். என்னை பிரதேச சபை உறுப்பினராகக்கூட கண்டுகொள்ளவில்லை.
எனது முடிவு சரியென நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பிரச்சினை முடிந்துவிடும். அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மை உள்ள தரப்புக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கவேண்டும். அதை செய்வேன். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை நான் பிரதமராக நியமிக்கமாட்டேன்” என்றார்.