மாகாண ஆட்சியிலும் மைத்திரிக்கு சோதனை! ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் ஐ.தே.க. பக்கம் தாவல்!
மேல் மாகாண சபை உறுப்பினர்களான நவுசர் பௌசி , கீர்த்தி காரியவசம் ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்றைய சபை 904) அமர்வின்போது இருவரும் தமது நிலைப்பாட்டை அவைக்கு தெரியப்படுத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளுகையின்கீழேயே மேல்மாகாணசபை இயங்கிவருகின்றது. அதன் முதல்வரான இசுறு தேவப்பிரிய மைத்திரியின் தீவிர விசுவாசிகளுள் ஒருவராவார்.
தற்போதுள்ள நிர்வாகத்தினருடன் தம்மால் பணிபுரிய முடியாது. எனவே, ஆளும் கூட்டமைப்பு மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க் கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம் என்று இருவரும் அறிவித்தனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பௌஸியின் மகனே, நவுசர் பெளசியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )