நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, 7 நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் இன்று காலை தொடக்கம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இன்று மாலை வரை தொடர்ந்து இந்த மனுக்களின் மீது விசாரணைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நாளை காலை வரை இந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று ஏற்கனவே, உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
…………..
மஹிந்தவும் மனுதாக்கல்
அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதற்கும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாக செயற்படுவதற்கும், தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, இன்று காலை முறையீட்டு மனு ஒன்றை, மஹிந்த ராஜபக்சவின் சட்டவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
எனினும் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.