ஐ.தே.க. தலைமையில் அடுத்தவாரம் புதிய அரசு! ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 30 கோடி ஒதுக்கப்படும்!!
” ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் அடுத்தவாரமளவில் புதிய ஆட்சி உதயமாகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சூழ்ச்சிமூலம் ஆட்சிக்குவந்த மஹிந்த – மைத்திரி ரசுக்கு ஒருமாதம் கடந்தும்கூட இன்னும் எந்தவொரு நாடும் வாழ்த்துதெரிவிக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வந்தால் ரூபாவின் பெறுமதி பாதுகாக்கப்படும் என மஹிந்தவும், அவரின் சகாக்களும் மார்தட்டினர். ஆனால், இன்று என்ன நடந்துள்ளது? டொலரின் பெறுமதி 182 ரூபாவை தாண்டியுள்ளது.
உலகசந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசு வகுத்த சூத்திரத்தாலேயே அதன் பயனை மக்களுக்கு இன்று அனுபவிக்ககூடியதாக உள்ளது.
கம்பெரலிய (ஊரெழுச்சி) திட்டத்துக்கு முன்னர் 20 கோடியே ஒதுக்கப்பட்டது. அடுத்தவாரமளவில் புதிய அரசு பதவியேற்கும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 30 கோடி ரூபாவை வழங்குவேன்.
அதேவேளை, கை உயர்த்தல், குரல்பதிவு என அனைத்து வழிகளிலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டியுள்ளோம். எமது உறுப்பினர் ஒருவர் சாரத்தை உயர்த்திக்கூட மூன்றிலிரண்டு பலத்தை மைத்திரிக்கு காட்டினார். இன்னும் தலைகீழாக நின்றுமட்டும்தான் காட்டவில்லை. அதையும் செய்வோம்” என்றும் மங்கள குறிப்பிட்டார்.