அரசியல் கைதிகள் குறித்து மைத்திரி திங்களன்று கூட்டமைப்புடன் பேச்சு!
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொறிமுறை ஒன்றின் கீழ் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்றிரவு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்த எதிர்வரும் திங்கட்கிழமை வருகை தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பில் சட்டமா அதிபரும் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது.
“தமிழ் அரசியல் கைதிகள் 105 பேரையும் விடுவிப்பது தொடர்பான பொறிமுறை பற்றி ஆராய விசேட குழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நியமித்துள்ளனர். அரசியல் கைதிகள் அனைவரும் சில வாரங்களுக்குள் விடுவிக்கப்படுவர்” என்று பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.