பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – மஹிந்த அணி புறக்கணிப்பு
பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வையும் மஹிந்த அணி புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பார்வையாளர் கலரி, விசேட அதிதிகளுக்கான கலரி ஆகியன இன்றைய தினமும் மூடப்பட்டிருக்கும். வழமைபோல் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்று படைக்கல சேவிதர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விசேட வர்த்தமானி அறிவித்தல்மூலம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கடந்த 14 ஆம் திகதி கூட்டப்பட்டது. அன்றிலிருந்து சபையில் பெரும் குழப்பம் நிலவிவருகின்றது. அடிதடிகூட அரங்கேறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை அமர்வை மஹிந்த அணி புறக்கணித்தது. சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்றும், அவரால் எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்றும் சுட்டிக்காட்டியது. இந்நிலையிலேயே இன்றைய சபை அமர்விலும் மஹிந்த அணி பங்கேற்காது என தெரியவருகின்றது.