ரூ. 1000 உறுதியென்றால் மூன்று எம்.பிக்களை வளைத்துபோடுவேன் – மஹிந்தவிடம் தொண்டா உறுதி!
” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எழுத்துமூலம் வழங்கினால் அல்லது அதற்கான அறிவிப்பை பகிரங்கமாக விடுத்தால் மலையகத்திலுள்ள மூன்று எம்.பிக்களை அழைத்துவருவேன்”
இவ்வாறு மைத்திரி, மஹிந்த கூட்டணியிடம் எடுத்துரைத்துள்ளார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்.
தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எம்.பிக்களை வளைத்துபோடும் முயற்சியில் மஹிந்த அணி தீவிரமாக இறங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரியும் நேரடியாகவே களமிறங்கியுள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவை திரட்டிதருமாறு தொண்டமானிடமும் உதவிகோரப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே, தோட்டத் தொழிலார்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்படுமனால், அதற்குரிய நடவடிக்கையில் நான் இறங்குவேன்.அதைகாரணம்காட்டி எம்.பிக்களையும் அழைத்துவருவேன். இல்லாவிட்டால் மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி எவரும் வரமாட்டார்கள் என்று தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்காவிட்டால், மலையகத்தில் வாக்குவேட்டை நடத்தமுடியாது என்றும், தமக்கான செல்வாக்கிலும் அது தாக்கத்தை செலுத்திவிடும் என்றும் தொண்டா தெரிவித்துள்ளார். இதற்கு மஹிந்த தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக தகவல்.