மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போர்! – ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்து
“மைத்திரி – மஹிந்த கூட்டணி அரசின் செயற்பாடுகளை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மாலைதீவு, சுவிஸர்லாந்து நாடுகள்கூட இந்த அரசை ஏற்குமோ தெரியாது. நாட்டில் ஜனநாயகம் – நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்காகவே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.”
– இவ்வாறு வண. தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின், அரசமைப்புக்கு எதிரான அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வண.தம்பர அமில தேரர் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு எதிரே அவர் இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தப் போராட்டத்தில் பௌத்த தேரர்கள், சிவில் சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.