கடன் சுமையை எதிர்கொள்ள மஹிந்த அரசு தயார் – மார்தட்டுகிறார் பந்துல
தேசியத்துவத்தை அழிக்கும் வெளிநாட்டு முறைமைகளை ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்தியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த தேசிய பொருளாதார முகாமைத்துவக் குழு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கிறது. அரச கொள்கைக்கு அமைய பிரதமருக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடு செலுத்த வேண்டியிருக்கும் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் செலுத்தும் என்று தெரிவித்த அமைச்சர் , ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நாட்டை அழித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால் இலங்கை கடன் தரப்படுத்தலில் தொடர்ந்தும் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. சர்வதேசத்தில் கடனை பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை மாற்றியிருக்கிறது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வருடாந்தக் கடன் தொகை ஒரு ட்ரில்லியன் வரை அதிகரித்திருக்கிறது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.