நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு – பார்வையாளர் கலரியும் மூடப்படுகிறது!
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இன்றைய தினமும் சபைக்குள்ளும், நாடாளுமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற பார்வையாளர் கூடத்துக்கு இன்று ( கலரி) மக்களும், விசேட விருந்தினர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண கலரியில் பொதுமக்களும், சபாநாயகர் கலரியில் விருந்தினரும் அமர்ந்திருந்து சபை நடவடிக்கைகளை வழமையாக அவதானிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்துக்குள் மோதல் ஏற்பட்டதையடுத்து பார்வையாளர் கலரியிலிருந்த சிலர், மஹிந்த அணியினருக்கு எதிராக கூச்சலிட்டனர். இதன்காரணமாகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.