“ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் வகையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி – அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பு, கண்டிமாவட்டத்தில் மீண்டும் அடாவடி அரசியலில் இறங்கியுள்ளது.” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் எம்.பியுமான வேலு குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்கள் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
நல்லாட்சியின் கீழ் கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களின் போது காட்சிப்படுத்தப்பட்ட ‘கட்டவுட்’கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தின்போது, கண்டிமாவட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதற்காக சில இனவாத அரசியல்வாதிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். இதனால், மாற்று அரசியலை அவர்கள் அனுமதிக்கவில்லை. மாற்றத்தைக்கோருவோரும் அடித்து விரட்டப்பட்டனர். இத்தகைய அரசியல் ரவுடிகளுக்கு, பிறப்பால் மட்டும் தம்மை தமிழர் என காட்டிக்கொள்பவர்களும் துணைநின்றனர்.
அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் தலைவிதியை அரசியல் ரவுடிகளிடம் அடகுவைத்து – தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கினர். இந்நிலைமையை மாற்றியமைத்து தமிழர்கள் கண்டி மண்ணிலும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக – மக்கள் ஆணைகோரி மனோ கணேசன் களமிறங்கினார். ஆனால், அரசியல் சூழ்ச்சிமூலம் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பின்னர் நிலைமைமேலும் மோசமடைந்தது. அடக்குமுறை தலைவிரித்தாடியதால் தமிழர்களும் விழித்துக்கொண்டனர். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே தலைவர் மனோ கணேசன் வழிவந்த என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். பின்வரிசை எம்.பியாக இருந்தபோதிலும் உரிமைகளுக்காக போராடினேன். என்னால் முடிந்த அளவு மட்டுமின்றி அதற்கு அப்பால் சென்றும் சேவையாற்றியுள்ளேன்.
அடுத்துவரும் ஆண்டுகளில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்தன. அதற்குகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். பதவிக்காக அலைபவர்கள் ஓடிச்சென்று அமைச்சுகளையும் பெற்றுக்கொண்டனர். அது அவர்களின் அரசியல் கொள்கையாக இருக்கலாம். அதில் தலையிட நாம் விரும்பவில்லை.
ஆனால், எம்மை அடக்கி ஆளும் அரசியலை அனுமதிக்க முடியாது. குறுக்கு வழியில் அதிகாரம் வந்தகையோடு அடாவடி அரசியலில் ஈடுபடும் இவர்களுக்கு, மக்கள் ஆணை கிடைத்தால் என்ன நடக்கும்? எனவே, கண்டிமாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இந்நிலைமையை உணரவேண்டும். வார்த்தை ஜாலம்காட்டி வாக்குகளை அபகரிக்கமுற்படலாம். இருந்தாலும் அபாய பொறிக்குள் நாம் விழுந்துவிடக்கூடாது.
நல்லாட்சியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திசைதிருப்பும் வகையில் கட்டவுட்களை அடித்து நொறுக்கும் இவர்கள், ஜனநாயகத்தையும், மக்கள் உரிமைகளையும் எவ்வாறு பாதுகாப்பார்கள்? போட்டி அரசியல் என்பது இருக்கவேண்டும். ஆனால், பழிவாங்கல் அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும் – என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.