கூட்டமைப்பினரின் முடிவுக்கு சிவசக்தி கட்டுப்படமாட்டார்! – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டுச் செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கியது அரசமைப்புக்கு முரணானது என்றும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வியாழேந்திரன் அரச தரப்புக்குத் தாவி பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார்.
அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை, கூட்டமைப்பின் முடிவு கட்டுப்பட்டுத்தாது, எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். நிலைமைகளை அவதானிக்கும். நிலைமைகள் எப்படிப் போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்” – என்று கூறியுள்ளார்.