ஆயிரம் ரூபா சம்பளம் கிடைப்பது உறுதி – நாளை இறுதி முடிவு என்கிறார் தொண்டா!
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், இது குறித்தான பேச்சு நாளை ( 01) நடைபெறவுள்ளது என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இறம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ புதிய அரசாங்கம், புதிய பிரதமர் என உருவாக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்ட அமைச்சு நமது வடிவேல் சுரேஸ{க்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோன்று தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி தொடர்பான அமைச்சு எனக்கு கிடைத்துள்ளது.
எனவே, புதிய பிரதமரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் எம்மால் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற பூரண நம்பிக்கை இருக்கின்றது.
01.11.2018 அன்று பெருந்தோட்ட முதலாளிமார் கம்பனி அதிகாரிகள், தொழிற்சங்கங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்புகளும் பேச்சு நடைபெறவுள்ளது. இந்த பேச்சு குறித்து அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் வேண்டும் என்ற இலக்கை நோக்கியே நாம் பேச்சை முன்னெடுப்போம்.
எது எவ்வாறாக இருப்பினும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை எம்மிடம் அதிகமாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.
க.கிசாந்தன்