மைத்திரியின் ஆட்டம் ஓயவில்லை – தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று அவசர பேச்சு!
மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி , புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களையும் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பை வழங்க தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லகஸ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.