போராட்டக்களமாக விஸ்வரூமெடுக்கிறது மலையகம் – இன்றும் எட்டுத்திக்கிழும் தொழிலாளர் புரட்சி!
ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், இன்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அட்டன், நோர்வூட் மற்றும் பெற்றசோ பகுதிகளில் ஊழியர்கள் வீதிகளில் இறங்கி – எச்சரிக்கை முழக்கமிட்டு போராடினர்.
பொகவந்தலா – பலாங்கொடை பிரதான வீதியை மறித்து பெற்றசோ சந்தியில் கொடும்பாவி எரித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைபட்டது.
“ அரச ஊழியாளர்களுக்கு மாத்திரம் வாழ்க்கை செலவிற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது. ஆனால், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியே சம்பளத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் வடிவேலு சுரேஸ் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
அதேவேளை, நோர்வூட் ஆயரபி தோட்ட தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
மு.இராமச்சந்திரன்