நிறைவேற்று அதிகாரத்தை இனியும் தொடரவிடலாகாது! – சபையில் ஐ.தே.க. போர்க்கொடி
மாறிவரும் ஒவ்வொரு அரசாலும் மீறப்பட்ட வாக்குறுதியாகக் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் என்ற சர்வாதிகார முறைமையை இனியும் தொடரவிடமுடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பிரதிச் சபாநாயகர் தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அராஜக அரசியல், ஊடகவியலாளர்கள் படுகொலை, அப்பாவி மக்கள் கொலை எனப் பல விடயங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் காணப்பட்டன. கொலைக்காரர்களைப் பாதுகாக்க நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டது.
மஹிந்த கட்சியினரும் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவதாகக் கூறினர். ஆனால், செய்யவில்லை. நல்லாட்சி அரசாலும் அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், நிறைவேற்று அதிகாரம் என்ற சர்வாதிகார முறைமையை இனியும் தொடரவிட முடியாது. நல்லாட்சியை ஸ்தாபிக்கச் செயற்பட்ட சோபித தேரரின் கோட்பாடும் அதுவே.
சகல விடயங்களையும் மத்திய அரசு நிர்வகிக்கத் தேவையில்லை. மாகாணங்களில் இடம்பெறும் விடயங்களை மாகாண சபைகளும் பிரதேச சபைகளும் நிர்வகிக்கலாம். அதனைக் கருத்தில்கொண்டு அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளச் செயற்படுவோம்” – என்றார்.