பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலகவேண்டும்! – மஹிந்த அணி வலியுறுத்து
“பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”
– இவ்வாறு புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
கேகாலைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்வதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா திட்டம் தீட்டியுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
கண்டி, திகன வன்முறை சம்பவத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷதான் உள்ளார் என வாக்குமூலம் அளித்தால் குடும்பத்தோடு வெளிநாடு அனுப்புவேன் என அமித்துக்கும் இவர் கூறியுள்ளார். ஆனால், குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. அவர் கோட்டாவுக்கு எதிரானவர்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்கும் வரை இது குறித்து சுயாதீன விசாரணை நடக்கப்போவதில்லை. எனவே, இவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும்” – என்றார்.