சிங்கங்களை வேட்டையாடின வங்கப் புலிகள்!
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றிக்கனியை ருசித்தது.
ஆசியக் கிண்ணத்தொடரின் முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் டுபாயில் களம் கண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வங்கதேசத்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய தமிம் இக்பால், லிடோன் டாஸ் ஜோடி சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 3 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது.
எனினும், ரஹூம், மொஹமட் மிதுன் ஆகியோர் சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தியதால் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் அணி 260 ஓட்டங்களைக் குவித்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியிருந்த லசித் மாலிங்க 10 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 261 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு , பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். தரங்க மட்டுமே சற்று சிறப்பாக ஆடி 27 ஓட்டங்களைக் குவித்தார். 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.
இறுதியில் 35.2 ஓவர்களில் இலங்கை அணியால் 124 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.