சுமந்திரன் எம்.பியைத் தீர்த்துக்கட்ட பாதாளக் கோஷ்டி மூலமும் முயற்சி?

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய அமர்வுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை தென்னிலங்கை பாதாள உலகக் குழு மூலமும் தீர்த்துக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டமை அம்பலமாகியிருப்பதாகக் கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

2016 கடைசிக்கும் 2017 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் போராளிகள் சிலரைப் பயன்படுத்தி வடக்கில் வைத்து கிளைமோர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்தச் சந்தேக நபர்கள் நான்கு தடவைகள் சுமந்திரனைக் கொல்ல முயன்றனர். ஆனால், முயற்சி பயனளிக்கவில்லை.

இது தொடர்பாகப் புனர்வாழ்வளிக்கப்பட்ட நான்கு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டனர். அந்த முயற்சிக்குப் பின்னால் நோர்வேயைச் சேர்ந்த ஒருவர் சூத்திரதாரியாக இருந்தார்.

இப்போது கொழும்பில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த மகிழன்கமுவ சஞ்சீவ என்பவர் மூலம் சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டமை பற்றிய தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்த வேந்திரன் என்பவர் ஆஸ்திரேலியாவுக்கும் பிற இடங்களுக்கும் ஆள்களைக் கடத்தும் விடயம் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கும் சமையன் குழு என்ற பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த அஸங்க என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அஸங்கவே பின்னர் சஞ்சீவவை வேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவர்கள் இருவரும் பின்னர் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அண்மையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் வேந்திரன் உட்பட எட்டுப் பேரை ஆயுதங்களுடன் வெயாங்கொடைப் பகுதியில் வைத்துக் கைதுசெய்தனர்.

அந்தக் குழுவினரைப் பொலிஸார் நன்றாகக் கவனித்து விசாரித்தபோதே பிரான்ஸிலும், சுவிட்ஸர்லாந்திலும் உள்ள புகலிடத் தமிழர்கள் சிலர் பணத்துக்கு சுமந்திரனைக் கொல்லுவதற்கு – அதுவும் தற்போதைய ஜெனிவா அமர்வு முன்னர் அவரைத் தீர்த்துக் கட்டுவதற்கு – வழிகாட்டுதல் வழங்கியிருந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் பொலிஸாருக்குத் தெரியவந்தது.

– இப்படி அந்தப் பத்திரிகையின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *