மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் வெடித்தது மோதல்! – கண்டிப் பேரணியைப் புறக்கணித்தது சு.க.
அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று (8) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே இந்தப் பேரணியை நடத்தவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச முதல் முறையாக இந்தப் பேரணியில் அரசியல் மேடையில் ஏறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
எனினும், தமக்கு அழைப்பு வரவில்லை என்றும், தாம் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுக்கள் இன்னமும் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தப் பேரணியை சுதந்திரக் கட்சி தவிர்த்துக் கொண்டுள்ளது.
தமது கட்சியைச் சேர்ந்த எவரையும் இந்தப் பேரணியில் பங்கேற்கக் கூடாது என்று சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்துள்ளார்.
இதனால் நேற்று நடந்த பேரணியில் பொது எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே பங்கேற்றிருந்தனர்.