புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியேதான்! – ரணிலின் உரை எடுக்காட்டுகின்றது என்கிறார் தவராசா

“ஒற்றையாட்சி தன்மையை உறுதிப்படுத்தும் தற்போதைய அரசமைப்பின் இரண்டாவது உறுப்புரையை பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக ஒற்றையாட்சியா? ஒருமித்த நாடா? என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இனியும் போலியான நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தக் கூடாது.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசமைப்பின் ஒற்றையாட்சியின் தன்மையை உறுதிப்படுத்தும் உறுப்புரிமை 2 மற்றும் பௌத்தத்துக்கான முன்னுரிமையை உறுதிப்படுத்தும் உறுப்புரிமை 9 என்பவற்றை பாதுகாத்துத்தான் புதிய அரசமைப்பைக் கொண்டுவரும்; இதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்காக அவை புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படும் என்று பொருளாகாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பு நிர்ணய சபையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் பின்பும், சமஷ்டிக்கான குணாம்சங்களைக் கொண்ட அதாவது ஏக்கிய இராச்சிய/ ஒருமித்த நாடு என்ற சொற்பதமும் அதற்கான பொருள் கோடலும் அடங்கிய ஓர் அரசமைப்பு வரைவு ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாம் நம்பிக்கை கொள்ள முடியுமா?

இந்த வரைவு தமிழ் மக்களின் வேணவாக்களான சமஷ்டி, இணைந்த வடக்கு – கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைவாக இல்லாவிட்டாலும் சமஷ்டி குணாம்சங்கள் அடங்கிய, கொழும்பு அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வை உள்ளடங்கிய வரைவாகக் காணப்படுகின்றது.

இணைப்புப் பட்டியல் மற்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களில் சில இடங்களில் மாகாணங்களுக்கான அதிகாரம் 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளியான வழிகாட்டல் குழு மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிட்ட அளவுக்கு இல்லாதிருந்தாலும் இன்றைய சூழலில் சில திருத்தங்களுடன் தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு வரைவாக இது அமைகின்றது.

அரசமைப்பு நிர்ணய சபையின் அனுமதியைப் பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளை தாண்டி இவ்வரைவு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருதவேண்டியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நிர்ணய சபையில் இவ்வரைவு சமர்ப்பிக்கப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதற்குச் சான்று பகிர்கின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாக இருந்துள்ளனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சி அணியினர் இதற்கு அதரவு வழங்க மாட்டார்கள் என்பது முற்றாக தெரிந்திருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் சேர்வதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும் என்ற ஓர் நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தும் காணப்படுகின்றது.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் காலிமுகத்திடலிலும் அதனைத் தொடர்ந்து மகாநாயக்கர்களைச் சந்தித்தபோதும் ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு என்று கூறியது அவர் ‘ஏக்கிய இராட்சிய/ஒருமித்த நாடு’ என்ற அர்த்தப்பட கூறினாரா? அல்லது தற்போதைய அரசமைப்பில் உள்ளதைப் போன்றதான தன்மையுடைய ஓர் ஒற்றையாட்சி அரசமைப்பைத்தான் கொண்டுவருவதாக கூறினாரா என்பது தெளிவற்று இருந்தது. இந்தத் தெளிவற்ற நிலைக்கு முடிவுகண்டாற்போல் பிரதமரின் மேற்கூறிய உரை அமைந்துள்ளது.

இந்தப் புதிய வரைவு ஊடாக அருகருகே உள்ள மாகாணங்களை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இணைப்பதற்கான ஏற்பாடு உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்து.

தற்போதைய அரசமைப்பிலும் இதேபோன்று ஒரு ஏற்பாடு உள்ளது என்பதை அவ்வாறு பரப்புரை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *