ஆவா குழுவினருடன் ஆளுநருக்குத் தொடர்பு? – விக்கிக்கு வந்தது சந்தேகம்
“ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்கமுடியும் என்று வடக்கு ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவா குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால் ஏன் அதனை அரசு ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை? அல்லது ஆளுநருக்கும் அரசுக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.”
– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நல்லூர் நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் சிறப்புரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவரது உரையின் ஒரு பகுதி வருமாறு:-
“ஒரு புறம் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அதேவேளை, மறுபுறம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களையும் பௌத்த மயமாக்கலையும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கள் மத்தியிலும் நல்லாட்சி அரசு முன்னெடுத்து வந்துள்ளது. இதற்கு ஆளுநர் உடந்தையாக இருந்துள்ளார்.
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மறுத்து வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அசட்டையீனமாக இருந்துவருகிறனர் அரசும் ஆளுநரும்” – என்றார்.