ஐ.சி.சி. அவசர கூட்டம்! பைஸர் டுபாய் பயணம்!!
சர்வதேச கிரிக்கெட் சபையின் அவசர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா டுபாய் பயணமாகியுள்ளார்.
குறித்த விசேட கூட்டத்தில், இலங்கை விளையாட்டுத்துறை விவகாரம் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை விட்டுக் கொடுத்தல் சம்பந்தமாக வெளிவரும் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத் தேர்வு ஆகியன தொடர்பிலும், அமைச்சர் பைஸர் முஸ்தபா, இதன்போது ஐ.சி.சி. அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார். அத்துடன், குறித்த விவகாரங்கள் தொடர்பில் இறுதியானதும், உறுதியானதுமான முடிவொன்றை எடுக்குமாறும், அமைச்சர் இதன்போது ஐ.சி.சி. அதிகாரிகளிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கவுள்ளார்.
இலங்கையின் கிரிக்கெட் தேர்வை, எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னராக நடத்துமாறு, அமைச்சர் பைஸர் முஸ்தபாவை ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம், இதற்கான பொருத்தத்தையும் அமைச்சர் ஐ.சி.சியினருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(ஐ.ஏ.காதிர்கான்)