கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா?
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய காங்கிரஸ் இடையேயான வார்த்தைப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன், விமர்ச்சித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், கச்சத்தீவு விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதையும் யோசிக்காமல் முட்டாள் தனமாக பேசுவதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் (12) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டமையினால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா? என தாம் கேள்வி எழுப்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கச்சத்தீவு குறித்த திக்விஜய் சிங்கின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மீனவர்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறது.
மேலும், இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்தியப் பகுதி குறித்த காங்கிரஸ் பிரதிநிதிகளின் கருத்துகள் கட்சியின் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.