இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடா படுகொலை

கனடாவில் கடந்தவாரம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

“கடந்த மூன்று நான்கு நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக” முன்னாள் பிபிசி ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்து மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக இந்த கொலைகள் ஏன் செய்யப்பட்டது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களது வீட்டில் வசித்த மற்றொரு இலங்கைப் பிரஜையான காமினி அமரகோனுடன் கொல்லப்பட்டனர்.

டிலந்திகா ஏகநாயக்கவின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் பக்கத்தில் இடம்பிடித்த செய்தி

இந்த குடும்பத்தடன், வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவரான 19 வயதான பெப்ரியோ டி சொய்சா மீது ஆறு முதல்தர கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்திருந்தன.

சிலோன் டுடே துணை ஆசிரியர் சுலோச்சனா மோகன், இந்தச் சம்பவம் இலங்கையில் மக்கள் பேசும் அதிர்ச்சிகரமான கதை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கொலைக்காண காரணத்தை தெரிந்துகொள்ள கனடாவில் சட்டப்பூர்வ செயல்முறையை தனது செய்தித்தாள் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் விசாரணை முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனிப்போம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையர்களுக்கு அதிர்ச்சி

கனடாவில் வாழும் குடும்பங்களைக் கொண்ட இலங்கையர்களுக்கு இந்தக் கதை வலுவாக எதிரொலிக்கிறது என ஊடகவியலாளர் தருஷி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையர்கள் குடியேறுவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக கனடா பார்க்கப்படுகிறது,”. எனினும், இந்த கொலைகள் இலங்கை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரசிங்க மற்றும் அமீன் ஆகியோரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களை ஊடகவியலாளர்கள் தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் குறித்து சமூக ஊடகங்களிலும் சில செய்தி வலைத்தளங்களிலும் பரவலான ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் ஊகங்கள் பொதுவானவை

வெளிப்படையாக ஆதாரமற்ற வதந்திகள் இலங்கையின் சில செய்தி வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டி சொய்சாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் குற்றங்களின் சூழ்நிலைகள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றம் கேட்கவில்லை.

இந்நிலையில், இலங்கையில் ஊகங்கள் பொதுவானவை என்று அஸ்ஸாம் அமீன் குறிப்பிட்டுள்ளார்.

“நிறைய ஊகங்களில், நிறைய அனுமானங்கள் இருந்ததாகவும்” “ஆனால் நாங்கள் அந்தக் கதைகளை ஒருபோதும் எடுக்கவில்லை” என்றும் சுலோச்சனா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த செய்தியை கனடா ஊடகங்கள் மிகவும் கண்ணியத்துடன் எடுத்துச் சென்றதாக ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *