அதிகரிக்கும் வெப்பம் காத்திருக்கும் ஆபத்து!
உலக அளவில் இப்போது தொடங்கி மே மாதம் வரை வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
கடந்த டிசம்பரில் எல் நினோ வானிலை நிகழ்வு உச்சத்தை எட்டியதாக அமைப்பு சுட்டியது.
உலக வரலாற்றில் மிக மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்றாக இது கருதப்பட்டது.
ஆனால் எல் நினோ சற்றுத் தணிந்திருந்தாலும் அதன் விளைவுகள் தொடர்ந்து உணரப்படும் என்று வானிலை ஆய்வகத்தார் எச்சரித்துள்ளனர்.
மக்களின் நடவடிக்கைகள் வானிலை நிகழ்வின் பாதிப்புகளை மேலும் கடுமையாக்கியுள்ளதுடன் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனால் நீடித்த வறட்சி, காட்டுத் தீச்சம்பவங்கள், சூறாவளி போன்றவை ஏற்படக்கூடும். எல் நினோ வானிலை பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.
இந்நிலையில், தாய்லந்தில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேங்கோக்கிலும் கரையோர நகரமான டிராட்டிலும் வெப்பநிலை ஏறக்குறைய 50 டிகிரியாகப் பதிவானது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.