மைத்திரி மகளின் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை களவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகா சிறிசேனவின் பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுர வீட்டிற்குள் புகுந்து தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை உட்பட சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம்(20) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. சதுரிகா சிறிசேனவின் கணவர் சுரஞ்சித் வெவெல்பனாவ தலங்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலங்கம பொலிஸ் குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் லக்ஷிதா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் இது போதைப்பொருளுக்கு அடிமையான நபர் அல்லது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு என சந்தேகிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பெறுமதி இருபத்தி ஒன்பது இலட்சத்து அறுபத்து நான்காயிரம் ரூபா எனவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.