அரசாங்கத்துக்குள் குழப்பம்! பிரதமர் பதவிக்கு பசில்?

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரபல வர்த்தகர் தம்பிக் பெரேரா, பசில் ராஜபக்ச உட்பட 6 பேரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்ளது. ஆனால், தம்மிக்க பெரேரா தற்காலிகமாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் முக்கிய அமைச்சர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, மஹிந்த அமரவீர உட்பட சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவான நிலைபாட்டில் உள்ளனர்.வேட்பாளரை இறுதிப்படுத்த முடியாதுள்ளமையால் கூட்டணியை வலுப்படுத்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளது பொதுஜன பெரமுன.

இந்நிலையில், தற்போது பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென கட்சியில் ஒரு தரப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டுமென இவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதுடன், அதற்கான யோசனையையும் கட்சியின் உயர்பீடத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்கவும் பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ளவும் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென இவர்கள் கருதுவதுடன், அதற்கான அழுத்தங்களையும் கட்சியின் உள்மட்டத்தில் கொடுத்துள்ளனர்.

எதிர்வரும் எந்த தேர்தலாயினும் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் நாடு முழுவதும் 2500 அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *