விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் – NOAA எச்சரிக்கை

 

விரையில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து அதன் தரவுகள் மூலம் சூரியப் புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக என்ஓஏஏ தெரிவித்துள்ளது. சூரியனில் மூன்று புள்ளிக் குழுக்கள் சூரியப் புயலை ஏற்படுத்தும் வலிமையோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3536, 3539, 3540 எனக் குறிப்பிடப்படும் மூன்று சூரிய புள்ளிகளும் சீரற்ற பீட்டா மற்றும் காமா காந்தப்புலங்களைக் கொண்டுள்ளன. இந்த புள்ளிகள் எம் (M) வகையிலான மிதமான சூரியப் புயலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு 45% உள்ளதாகவும், 10% எக்ஸ் (X) வகையிலான வலிமையான சூரியப் புயலை ஏற்படுத்தக்கூடும் எனவும் என்ஓஏஏ தெரிவிக்கிறது.

இந்த வகையிலான சூரியப்புயல்களால் பூமியில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சேமிப்பு சாதனங்கள் வெகுவாக பாதிக்கப்படும். தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மாதக்கணக்கில் தடைபடலாம் என விண்வெளி ஆய்வு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்துள்ளனர்.

சூரியனிலிருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்கள் பெரிய அளவில் பூமியைத் தாக்கும் நிலையில், புவிகாந்தப் புயல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் காந்தப்புலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 31, சூரியன் வலிமை வாய்ந்த கதிர்களை வெளியேற்றியதாக நாசா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *