தண்ணீர் போத்தலில் காத்திருக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

 

மக்கள் ஒவ்வொரு லிட்டர் போத்தல் தண்ணீரிலும் கால் மில்லியன் கண்ணுக்குத் தெரியாத சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்வதாகவும் இது முன்பு மதிப்பிடப்பட்டதை விட 10-100 மடங்கு அதிகம் எனவும் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் தண்ணீர் போத்தலில்சராசரியாக 240,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பல நுண்துகள்கள் வரலாற்று ரீதியாக கண்டறியப்படாமல் இருந்தவை என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

அதற்கமைய, பிளாஸ்டிக் மாசுபாட்டின் விளைவுகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

Proceedings of the National Academy of Sciences (PNAS) இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 1 மைக்ரோமீட்டருக்கும் குறைவான நீளம் உள்ள அல்லது மனித முடியின் அகலத்தில் எழுபதில் ஒரு பங்கு அளவில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை முதலில் மதிப்பீடு செய்தது.

முந்தைய ஆய்வுகள் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் அல்லது 1 முதல் 5,000 மைக்ரோமீட்டர்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள துண்டுகளை மட்டுமே கணக்கிட்டதால், போத்தல் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட நானோ பிளாஸ்டிக்குகள் மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை மனித உயிரணுக்களுக்குள் ஊடுருவி, இரத்த ஓட்டத்தில் நுழைந்து உறுப்புகளைப் பாதிக்கும் அளவுக்கு சிறியவை. நானோபிளாஸ்டிக்ஸ் தொப்புள்கொடி வழியாக கருவில் உள்ள குழந்தைகளின் உடலுக்கும் செல்ல முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மூன்று பிரபலமான பிராண்டுகளில் இருந்து வாங்கிய சுமார் 25 ஒரு லிட்டர் போத்தல் தண்ணீரை பகுப்பாய்வு செய்துள்ளனர். ஒவ்வொரு லிட்டரிலும் 110,000 முதல் 370,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றில் 90% நானோ பிளாஸ்டிக்குகள்.

பல தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும் ஏழு பொதுவான பிளாஸ்டிக் வகைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றில் இருந்த தண்ணீரில் அடையாளம் தெரியாத பல நானோ துகள்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் ஒவ்வொரு ஆண்டும் 450 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்கிறது. 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் போத்தலில் மூடியைத் திறந்து மூடுவதால் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீருக்குள் விழும் என்று 2021ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *