உலகின் உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை இழக்கப்போகும் புர்ஜ் கலீபா
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை (Burj Khalifa) விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர கட்டிடம் என்ற பெருமை இந்த கட்டிடத்திற்கு உள்ளது.
2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா 2004ல் கட்ட தொடங்கப்பட்டு 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.
இந்த நிலையில் இதை விட உயரமாக ஜித்தா கோபுரம் (Jeddah Tower) என்ற கட்டடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. இந்த கட்டடம் 1000 மீட்டர் உயரம் என்றும் 167 மாடிகள் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் “உலகின் உயரமான கட்டிடம்” எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கும். சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக இந்த பணியை முன்னெடுத்து வருகிறார்.
இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர். புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.
திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் “1 கிலோமீட்டர் உயர கட்டிடம்” எனும் புகழை பெறும்.