அநுரவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அதிக வாக்குகளைப் பெறுவார் என கருத்துக் கணிப்பொன்றில் நிரூபனமாகியுள்தாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டின் முன்னணி நிறுவனமொன்று நடத்திய முதற்கட்ட கருத்துக் கணிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு 42 வீதமான மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பில் 46 வீதமான மக்கள் ஆதரவளித்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட கருத்துக்கணிப்பில் 50 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, அரசுக்கான ஆதரவு 9 வீதமாக உள்ளது.” என்றார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தேசிய மக்கள் சக்தி பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.
அதன் ஒருகட்டமாக உலகளாவிய ரீதியில் உள்ள இலங்கை மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பல்வேறுகட்ட சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அநுரகுமார திஸாநாயக்க அங்கு பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டார்.
அதேபோன்று இலங்கை மக்கள் அதிகமாக வாழும் இத்தாலிக்கும் அநுரகுமார திஸாநாயக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இங்கு அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.