உலகக் கிண்ண போட்டிகளில் முதல் முறையாக ‘டக் அவுட்’ ஆன கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, உலகக் கிண்ண போட்டிகளில் முதல் முறையாக ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ‘டக் அவுட்’ ஆகியுள்ளார்.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட அவர் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தப் போட்டி லக்னோவில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்திருந்தது.
ஆரம்பம் முதல் சிறப்பாக பந்துவீசி வரும் இங்கிலாந்து அணி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.
40 ஓட்டங்களுக்கு இந்திய அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது. சுப்மன் கில், விராட் கோலி மற்றம் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இதில் விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக 32 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 53.23 சராசரியில் 1384 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இது ஒருநாள் போட்டிகளில் அவரது 16வது ‘டக் அவுட்’ ஆகும். அதேநேரம், இங்கிலாந்துக்கு எதிராக அவரின் மூன்றாவது ‘டக் அவுட்’ஆகும்.
2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ‘டக் அவுட்’ ஆனார். பின்னர் 2013ஆம் ஆண்டு தர்மசாலாவில் இடம்பெற்ற போட்டியில் ‘டக் அவுட்’ ஆகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.