அமெரிக்கர்களுக்கு ‘உலகம் தழுவிய பயண எச்சரிக்கை
வெளிநாட்டில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை இன்று “உலகம் தழுவிய எச்சரிக்கை” அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகளவில் “வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட” வேண்டும் என அமெரிக்க பிரஜைகளை வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, “சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு” வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது.
இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு “பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய” அமெரிக்கப் பயணிகளை வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
“பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஆயுத மோதல்கள்” காரணமாக காஸா பகுதிக்கு “பயணம் வேண்டாம்” என்ற மிகக் கடுமையான எச்சரிக்கையை வெளியுறவுத்துறை விடுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஹமாஸ் தாக்குதல் காரணமாக அமெரிக்கர்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
7,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை விட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.
செவ்வாயன்று, இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவுடைய போராளிக் குழுவான ஹிஸ்பொல்லாவுக்கும் இடையே ஏவுகணை மற்றும் பீரங்கி பரிமாற்றங்கள் காரணமாக லெபனானுக்கு “பயணம் செய்ய வேண்டாம்” என்று வெளியுறவுத்துறை தனது பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.