சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி ஆரம்பம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் அச்சிடுவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் எண்ணிக்கை 900,000 ஐக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிடுவதற்கான அட்டை மற்றும் போதுமான உற்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் இருந்து 1 மில்லியன் அட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் smart chips கொண்ட 500,000 அட்டைகளும் QR குறியீட்டு முறைமை கொண்ட 500,000 அட்டைகளும் உள்ளடங்குகின்றன.

இந்த பின்னணியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்தில் இரண்டு இயந்திரங்கள் மாத்திரமே உரிய முறையில் செயற்படும் நிலையில், நாளொன்றுக்கு 2,000 அட்டைகளையே அச்சிட முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, smart chips கொண்ட 500,000 அட்டைகளை அச்சிடும் பணி கடந்த 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மாத இறுதிக்குள் மேலும் மூன்று அச்சு இயந்திரங்கள் பெறப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் நாளொன்றுக்கு 6,000 முதல் 7,000 வரையான சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விண்ணப்பித்த அனைவருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஆறு மாதங்களில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *