லியோ படத்திற்கு இலங்கையில் தடை?
வடக்கு, கிழக்கில் நாளை மறுதினம்(20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க இருப்பதால், லியோ திரைப்படத்தினை வெளியிடக்கூடாது என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மை இல்லை.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் ஹர்த்தாலன்று நிறுத்த, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று வெளியாகியுள்ளது.
அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் காணப்பட்டது.
குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போது, கட்சித் தலைவர்கள் எந்த கடிதத்தையும், கோரிக்கையையும் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது.
வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும், தெரிவித்தனர்.
மேலும், லியோ திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் உலக வாழ் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களை குழப்பும் வகையில் போலியான கடிதங்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து நாளை மறுதினம் 20ம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.