காசா மருத்துவமனையைத் தாக்கியது பாலஸ்தீன ஜிஹாத் அமைப்பாம் இஸ்ரேல் அறிவிப்பு!.
காசா மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், இஸ்ரேல் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
காசா மருத்துவமனை மீது தாக்குதல்
காசாவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதையும் அதிரச் செய்துள்ளது.
தாக்குதலுக்கு கண்டனங்கள் குவியும் நிலையில், தாக்குதலை நிகழ்த்தியது இஸ்ரேல் என பாலஸ்தீனிய அதிகாரிகள் குற்றம் சாட்ட, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்துள்ளது.
ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்…
இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணம், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது இஸ்ரேல். சில ட்ரோன் காட்சிகள், சில உரையாடல்கள் ஆகியவற்றை ஆதாரமாக வெளியிட்டுள்ளது இஸ்ரேல்.
ஆதாரங்களை வெளியிட்டு ஊடகவியலாளர்கள் முன் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளரான Rear Admiral Daniel Hagari, முதலாவது, அந்த பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் எதையும் அந்த நேரத்தில் நிகழ்த்தவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவ ட்ரோன்கள் எடுத்த சில வீடியோ காட்சிகள், தாக்குதல் அருகிலிருந்து நிகழ்த்தப்பட்டதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
தவறுதலாக வீழ்ந்த ராக்கெட்கள்
அத்துடன், பயங்கரவாதிகள் சிலர் ராக்கெட்கள் தவறுதலாக அருகிலேயே விழுந்ததைக் குறித்து பேசிக்கொள்ளும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உரையாடல்களில் ஒன்றில், ராக்கெட்கள் மருத்துவமனைக்குப் பின்னாலுள்ள கல்லறையிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவை தவறுதலாக தங்கள் பக்கத்திலேயே விழுந்துவிட்டதாகவும் கூறப்படுவதாக இருவர் பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது.
அதாவது, நேற்று மாலை 6.15 மணியளவில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் ராக்கெட்களை வீசியதாம். 6.59க்கு மீண்டும் சுமார் 10 ராக்கெட்கள் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது வீசப்பட்டதாம். அந்த ராக்கெட்களை இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு வீசியதாம்.
அப்போதுதான், மருத்துவமனை தாக்குதலுக்குள்ளானது என்று கூறும் இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர், அப்படி அந்த அமைப்பு இஸ்ரேல் மீது வீசிய ராக்கெட்களில் ஒன்றுதான் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்துவிட்டதாக கூறியுள்ளார்.