காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் : 500 பேர் உயிரிழப்பு
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசா நகரின் மையத்தில் அமைந்துள்ள al-ahli எனப்படும் அரபு வைத்தியசாலை மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை நோக்கி தொடர்ந்து குண்டுத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இந்த பின்னணியில் இஸ்ரேல் நேற்று இரவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹமாஸ் ஆயுத குழுவுக்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் நோயாளிகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஈரான், துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், குறித்த தாக்குதல் கொடூரமான குற்றம் எனவும், இனப்படுகொலை எனவும் பலஸ்தீன பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகள் இதனை பொறுப்பேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.