ஜேர்மனியில் நடந்த கோர விபத்து – ஏழு புகலிட கோரிக்கையாளர்கள் பலி
ஜேர்மனியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஏழு புகலிட கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் குடியேறிகளை அழைத்துச் சென்றதாக நம்பப்படும் மினி பேருந்து ஜேர்மனியில் சாலை சோதனையைத் தவிர்க்க முயன்ற போது விபத்துக்குள்ளானது.
ஆஸ்திரிய உரிமத் தகடுகளுடன் கூடிய இந்த மினி பேருந்து 23 பேரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான எல்லையில் இருந்து 50 கிலோமீற்றர் (31 மைல்) தொலைவில் முனிச் நோக்கிச் சென்றபோது சோதனையைத் தவிர்க்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட்டில் இறங்குவதற்குள் பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் ஆட்கடத்தல்காரர் ஒருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இறந்தவர்களில் ஆறு வயது குழந்தை இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்” பாதிக்கப்பட்டவரின் பாலினம் அல்லது தேசியம் குறித்து கருத்து வெளியிடவில்லை.
“ஓட்டுனர் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆட்கடத்தல்காரர் உயிர் தப்பியுள்ளனர்.
வாகனத்தில் பயணம் செய்தவர்கள் சிரிய மற்றும் துருக்கிய நாட்டவர்கள் என்றும், ஓட்டுநர் “நாடற்றவர்” என்றும் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 16 பேரில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.