இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்; ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் உயிரிழப்பு
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், லெபனான் எல்லையிலிருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது அதிகாலை வேளையில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தெற்கு லெபனானில் நடைபெறும் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் சிலர் ‘பிரஸ்’ ஜாக்கெட்டுகள் அணிந்து வெள்ளிக்கிழமை (13) சென்றிருந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல செய்தியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், ரொய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர் இசாம் அப்தல்லா உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் லெபனானைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற ஆறு செய்தியாளர்கள் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்த துயர சம்பவத்துக்கு வருந்துகிறோம்’என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல்ரிச்சர் ஹெக்ட் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இஸ்ரேல் தாக்குதலில்தான் இந்த உயிரிழப்பு நடந்தது என கூறவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என மட்டும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதல் எனவும், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு பேரவையிடம் முறையான புகார் அளிக்கவுள்ளதாகவும் லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.