காசா மக்களின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்?

சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதி 41கி.மீ. நீளமும் 10கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் சூழப்பட்டுள்ளது.

முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காசா, 1967-இல் மத்திய கிழக்குப் போரின் போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது. பின், இஸ்ரேல் 2005-இல் அங்கிருந்த தனது படைகளையும், அங்கு குடிபெயர்ந்திருந்த சுமார் 7,000 மக்களையும் திரும்பப் பெற்றது.

2007-இல் வன்முறைக்குப் பிறகு, அப்போதைய ஆளும் பாலத்தீனிய ஆணைய (PA) படைகளை வெளியேற்றிய இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஹமாஸ், காசாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

அப்போதிருந்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகியவை பாதுகாப்புக் காரணங்களுக்காக, காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்தியுள்ளன.

ஹமாஸ் ஆயுதக்குழுவை ஒரு பயங்கரவாதக் குழுவாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.ஹமாஸ் ஆயுதக்குழு காஸாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இஸ்ரேலுடன் பல போர்களை நடத்தியுள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவியும், பிற ஆயுதக் குழுக்களைச் சுட அனுமதித்தும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

  • காசா
முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காசா, 1967-இல் மத்திய கிழக்குப் போரின் போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது. பின், இஸ்ரேல் 2005-இல் அங்கிருந்த தனது படைகளையும், குடிபெயர்ந்திருந்த சுமார் 7,000 மக்களையும் திரும்பப் பெற்றது.

சமீபத்திய வன்முறைக்கு காரணம் என்ன?

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின்போது, குறைந்தது 1,200 பேரைக் கொன்று, சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்துச் சென்றனர்.

பதிலுக்கு, இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலின் ராணுவத்தினர் எல்லைப்பகுதியில் காசா மீதான தரைவழித் தாக்குதலுக்காக குவிந்துள்ளனர்.

ஹமாஸுக்கு எதிரான மோதலில், அவர்களைத் தோற்கடித்து ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

  • காசாவில் ஒரு நாள்
ஹமாஸ் உடனான மோதலில் அவர்களை தோற்கடித்து ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்

காசாவில் ஒரு நாள்
இஸ்ரேலின் உள்கட்டமைப்பு அமைச்சர் காசாவிற்கான தண்ணீர் விநியோகத்தை துண்டித்தார்.

தண்ணீர், உணவு, மின்சாரத்திற்கு தடைவிதித்த இஸ்ரேல்

ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், அக்டோபர் 9-ஆம் தேதி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், காசாவுக்கு அனுப்பப்படும் அனைத்து அத்தியாவசிய விஷயங்களையும் நிறுத்துவதாக அறிவித்தார். மேலும், அவர்களுக்கு “மின்சாரம், உணவு, எரிபொருள் என எதுவும் இருக்காது,” எனக் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் உள்கட்டமைப்பு அமைச்சர் காசாவிற்கான தண்ணீர் விநியோகத்தை துண்டித்தார்.

முன்னதாகவே காசாவில் உள்ள 80% மக்களுக்கு சர்வதேச உதவி தேவைப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

காசாவில் உள்ள ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும், எரிபொருள் இல்லாததால், அக்டோபர் 11-ஆம் தேதி மின் உற்பத்தி நின்றுவிட்டது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகள் தங்களது ஜெனரேட்டர்கள் மூலம் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். குறைந்த அளவு எரிபொருளையே கொண்டிருந்த சில மருத்துவமனைகள், சில நாட்களில் தங்களிடம் உள்ள எரிபொருள் தீர்ந்துவிடும் எனக்கூறியுள்ளன.

தண்ணீர் விநியோகத்தைத் துண்டிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையால், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கன்றனர். உள்ளூரில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் செயல்படுவதற்கும் எரிபொருள் தேவைப்படும்.

காசாவிற்கு சரக்கு கொண்டு வரப்படும் கெரேம் ஷாலோம் பகுதியும் மூடப்படுவதால், உணவு இருப்பும் குறைந்து வருகிறது. காசாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறியுள்ளன. பெரும்பாலான கடைகளில் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவு இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

குறைந்தது இரண்டு லட்சம் மக்கள், தங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாலும், உயிருக்கு பயந்தும் இடம் பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் ஐ.நா. நடத்தும் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

  • காசாவில் ஒரு நாள்
காசா தனக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரத்தை இஸ்ரேலிடம் இருந்து தான் வாங்குகிறது

இருளில் மூழ்கிய காசா

ஐ.நா.வின் கூற்றுப்படி, தற்போதைய மோதலுக்கு முன்பே, காசாவில் மின்வெட்டு என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 13 மணிநேரம் மட்டுமே வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்ததாக ஐநா கூறுகிறது.

காசா தனக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரத்தை இஸ்ரேலிடம் இருந்து தான் வாங்குகிறது. மீதமுள்ள மின்சாரம் காசாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அது, இதுவரையிலும், மொத்தமாகவே காசாவின் தேவைக்கு பாதிக்கும் குறைவாகவே இருந்துள்ளது.

மின்தடையைச் சமாளிக்க அங்குள்ள குடும்பங்கள் ஜெனரேட்டர்களை நாட வேண்டும். ஆனால், அவை எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை சார்ந்து இருப்பதால், அவற்றை முழுவதுமாக நம்பியிருக்க முடியாது. ஏனேனில், ஜெனேரட்டர்கள் பொது மக்கள் மற்றும் ராணுவம் பயன்படுத்தும் இரட்டை-பயன்பாட்டை கொண்டிருந்ததால், அவற்றுக்கு இஸ்ரேல் இறக்குமதிக் கட்டுப்பாடு விதித்திருந்தது.

  • காசாவில் ஒரு நாள்
கடந்த ஆகஸ்ட் மாதம், 58,600 பேர் எரிஸ் வழியாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இது 2022-ஆம் ஆண்டின் மாதாந்திர சராசரியை விட 65% அதிகமாகும் என ஐ.நா. குறிப்பிடுகிறது

மூடப்பட்ட எல்லைகள்

மோதலில் இருந்து தப்பிக்க காசாவை விட்டு வெளியேற முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு இல்லை.

இஸ்ரேல், காசாவிற்கு வடக்கே உள்ள எரிஸ் கடல் எல்லையை காலவரையின்றி மூடியுள்ளது. அதே நேரத்தில் தெற்கில் எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்லைக் கடக்கும் பகுதியில், அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதி இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களால் அந்தப் பகுதியும் மூடப்பட்டது.

இந்த சமீபத்திய தாக்குதலுக்கு முன், பாலத்தீனர்கள் காசாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வெளியேற வேண்டும் என்றால் முன் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி, தினக்கூலிகள், தொழிலதிபர்கள், நோயாளிகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆகஸ்டில், 58,600 பேர் எரிஸ் வழியாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர், இது 2022-ஆம் ஆண்டின் மாதாந்திர சராசரியை விட 65% அதிகமாகும் என ஐ.நா. குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், ரஃபா வழியாக வெளியேற விரும்பும் பாலத்தீனர்கள் பல வாரங்களுக்கு முன்பே பாலத்தீனிய அதிகாரிகளிடம் பதிவு செய்து எகிப்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடு வரம்புகளை விதித்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் 19,600 பேரை ரஃபா வழியாக காஸாவை விட்டு வெளியேற எகிப்து அனுமதித்தது, இது ஜூலை 2012-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையாக இருந்தது.

  • காசாவில் ஒரு நாள்
காசாவில் சராசரியாக, ஒரு சதுர கி.மீ.க்கு 5,700க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இது லண்டனில் உள்ள மக்கள் தொகை அடர்த்திக்கு ஈடாக உள்ளது

வீடுகளை இழந்த காசா மக்கள்

உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தி உள்ள பகுதிகளில் காசாவும் ஒன்று.

காசாவில், ஒரு சதுர கி.மீ.க்கு சராசரியாக 5,700க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இது லண்டனில் உள்ள மக்கள் தொகை அடர்த்திக்கு ஈடாக உள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை காசா நகர் பகுதியில் 9,000-க்கும் அதிகமாக உள்ளது.

காசாவின் மக்கள்தொகையில் வெறும் 75% – சுமார் 17லட்சம் மக்கள் – பதிவு செய்யப்பட்ட அகதிகள் என்று ஐ.நா. குறிப்பிடுகிறது. அவர்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் காசா முழுவதும் அமைந்துள்ள எட்டு நெரிசலான முகாம்களில் வாழ்கின்றனர்.

2014-ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட 13,000 வீடுகளில், சுமார் 2,200 வீடுகளை புனரமைக்க இன்னும் நிதி வழங்கப்படவில்லை என கடந்த ஜனவரி மாதம் ஐ.நா. கூறியிருந்தது. பாதி சேதமடைந்த மேலும் 72,000 வீடுகளுக்கு எந்த பழுதுபார்ப்பு உதவியும் கிடைக்கவில்லை, என்றும் ஐ.நா. கூறியிருந்தது.

  • காசாவில் ஒரு நாள்
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் 1,000 வீடுகள் அழிந்துள்ளதாகவும், 500 வீடுகள் வாழத் தகுதியற்ற வகையில் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

‘இரட்டைப் பயன்பாடு’ பொருட்கள் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகள் புனரமைப்பது தடைபட்டது.

தற்போதைய இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் 1,000 வீடுகள் அழிந்துள்ளதாகவும், 500 வீடுகள் வாழத் தகுதியற்ற வகையில் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெருக்கடியில் உள்ள சுகாதார சேவைகள்

காசாவில் ஒரு நாள் வாழ்க்கை
2008 முதல் 2022 வரை, 70,000 நோயாளிகளின் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தாமதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டன. பல நிராகரிக்கப்பட்டன

காசாவின் பொது சுகாதார நிலையங்கள் அடிக்கடி மின்வெட்டு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. பல சேவைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கவில்லை.

இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கட்டுப்பாடுகள், பாலத்தீனப் பகுதிகளில் சுகாதாரப் பொறுப்பைக் கொண்ட பாலத்தீன அதிகாரம் (PA), மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு இடையேயான மோதல்கள் என அனைத்தும் இந்த மோசமான சுகாதார கட்டமைப்புக்கு காரணம் என்று ஐ.நா. கூறுகிறது.

காசாவில் உள்ள நோயாளிகள் மேற்கு கரை அல்லது கிழக்கு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டும் என்றால், முதலில் பி.ஏ. (PA) என்றழைக்கப்படும் பாலத்தீன தேசிய ஆணையத்திடமும் பின், இஸ்ரேலிய அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டும்.

2008 முதல் 2022 வரை, 70,000 நோயாளிகளின் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தாமதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டன. பல நிராகரிக்கப்பட்டன. சில நோயாளிகள் தங்கள் விண்ணப்பத்திற்கான பதிலுக்காக காத்திருக்கும் போது இறந்தனர்.

  • காசாவில் ஒரு நாள் வாழக்கை
விவசாயம் செய்வதற்கும் மீன் பிடித் தொழில் செய்வற்கும் இஸ்ரேல் விதித்திருந்த கட்டுப்பாடுளால், காசா மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் குறைந்தது

விவசாயம் மற்றும் மீன்பிடிக்க என்ன கட்டுப்பாடு?

காசாவில் 13 லட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐ.நா. கூறுகிறது. அங்கு மக்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியுள்ளனர்.

ஆகஸ்ட் 2023-இல் கெரெம் ஷாலோம் மற்றும் ரஃபா கடவை வழியாக இஸ்ரேல் மற்றும் எகிப்து அனுமதித்த 12,000 டிரக் சரக்குகளில் சுமார் 22% உணவுப் பொருட்கள் என்று ஐ.நா. கூறிகிறது.

விவசாயம் செய்வதற்கும் மீன் பிடித் தொழில் செய்வற்கும் இஸ்ரேல் விதித்திருந்த கட்டுப்பாடுகிளால், காசா மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் குறைந்தது.

சுமார் 60 கி.மீ. நீளமுள்ள இஸ்ரேலிய சுற்றுச்சுவர் வேலியில் இருந்து 100மீ (330அடி) வரையிலான பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாகக் கருதப்படுகின்றன. விவசாயிகளுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், அங்கு எதையும் பயிரிட முடியாது. விவசாயிகளைத் தவிர மற்றவர்கள் 300 மீட்டருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

  • காசா
சமீபத்திய மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் கெரெம் ஷாலோமை மூடியது. மீன்பிடிப்பதற்கும் தடை விதித்துள்ளது

இஸ்ரேல் மத்தியதரைக் கடலில் படகுகளை இயக்கக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது காசா மக்கள் கரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் மட்டுமே மீன்பிடிக்க முடியும் – தற்போது 6 முதல் 15 கடல் மைல்கள் (11-28 கி.மீ.) மட்டுமே அவர்கள் செல்ல முடியும். இதனால், சுமார் 5,000 மீனவர்கள் மற்றும் தொடர்புடைய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

சமீபத்திய மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் கெரெம் ஷாலோமை மூடியது, மீன்பிடிப்பதற்கும் தடை விதித்துள்ளது.

அடைக்கப்பட்ட எல்லைகளைச் சுற்றி வருவதற்கு, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுரங்கப்பாதைகளை உருவாக்கியுள்ளனர். இது எகிப்தில் இருந்து சரக்குகளை கொண்டுவரப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தச் சுரங்கப்பாதைகளை ஆயுதக்குழுவினர் ஆயுதங்களை கடத்தவும், கண்ணுக்கு தெரியாத வகையில் சுற்றி வரவும் பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.

  • தண்ணீர் தட்டுப்பாடு

காசாவின் மக்கள் தொகையில் 95% பேருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

உலக சுகாதார நிறுவனம், ஒரு நபருக்கு தினசரி குடிப்பதற்கும், கழுவுவதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும் குறைந்தபட்சம் 100லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக நிர்ணயித்துள்ளது. காசாவில் சராசரி நுகர்வு சுமார் 84 லிட்டர். அதில் 27 லிட்டர் மட்டுமே மனித பயன்பாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் இஸ்ரேலின் முடிவால் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று ஐ.நா. கடந்த அக்டோபர் 10 அன்று எச்சரித்தது.

அத்தியாவசிய சேவைகளுக்காக நீரைச் சேமிக்கக்கோரி உள்ளூர் அதிகாரிகள் மக்களை வலியுறுத்துவதாகவும், எரிபொருள் பற்றாக்குறையால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாகவும், இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான கேன்கள் மூலக் கழிவுநீர் கடலில் செலுத்தப்படுவதாகவும் ஐ.நா. கூறியது.

  • பள்ளிகள் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன

காசாவில் பல குழந்தைகள் ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கின்றனர். தற்போது அந்தப் பள்ளிகள், சமீபத்திய மோதலில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்களின் தங்குமிடங்களாக செயல்படுகின்றன.

பாலத்தீனிய அகதிகள் நிறுவனமான UNRWA படி, காசாவில் உள்ள அதன் 278 பள்ளிகளில் 71% ‘டபுள் ஷிப்ட்’ முறையில் இயங்குகின்றன. காலையில் ஒரு பள்ளி மாணவர்களும் பிற்பகலில் மற்றொரு பள்ளி மாணவர்களும் பயில்கின்றனர்.

2022-இல் ஒரு வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 41-ஆக இருந்தது.

15-19 வயதுடையவர்களுக்கான கல்வியறிவு விகிதம் 2021 இல் 98% ஆக இருந்தது.

  • காசாவில் ஒரு நாள்

உச்சத்திலிருக்கும் வேலையின்மை

சி.ஐ.ஏ வேர்ல்ட் ஃபேக்ட்புக் (CIA World Factbook) படி, காசா உலகின் இளைய மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 65% மக்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

காசாவில் 80% க்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், அங்கு வேலையின்மை அளவு உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. இது 2022 இல் 45% ஆக இருந்தது.

இளைஞர்களிடம் வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. அதாவது, 73.9% பேர் 19 மற்றும் 29 வயதுக்கு இடைப்பட்ட இடைநிலைப் பள்ளி டிப்ளோமாக்கள் அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *