காஸாவின் ஆக்ரோஷ தாக்குதல்களை சமாளிக்குமா இஸ்ரேல்?

 

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.

அக்டோபர் 7 அன்று, பலஸ்தீனியக் குழுவான ஹமாஸின் திடீர் தாக்குதலால் அதிநவீன அமைப்பின் பாதுகாப்புத் தன்மை வெளிப்படையாக கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

வான், தரை மற்றும் கடல் வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை உள்ளடக்கிய ஹமாஸி பேரழிவு தாக்குதல் நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில், ஆபரேஷன் ‘அல்-அக்ஸா ஃப்ளட்’ (Al-Aqsa Flood) என்று அழைக்கப்படும் தாக்குதலில் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஹமாஸ் ஏவியது.

இதற்கு பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் அரசு மாபெரும் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலின் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் அயர்ன் டோம் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கவசம் தாக்குதலின் தொடக்கத்திலேயே – ஹமாஸின் ஏவுகணைகளால் சிதைக்கப்பட்டதா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி.

அயர்ன் டோம் ஒரே நேரத்தில் பல அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டது. அதன் வெற்றி விகிதம் 90% வரை இருக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால் சனிக்கிழமையிலிருந்தே வெளியாகும் படங்கள் மற்றும் வீடியோக்களில் உள்ள காட்சிகளைக் காணும் போது, ஹமாஸின் ஆரம்ப தாக்குதலின் தீவிரம் அந்த அயர்ன் டோம் அமைப்பை முறியடித்துவிட்டது என்பது தெரியவருகிறது.

இஸ்ரேலை நோக்கி ராக்கெட் ஏவப்படும் போது, ​​அது ராடார் மூலம் கண்டறியப்படுகிறது. பின்னர் அந்த ராக்கெட்டின் போக்கு எப்படி அமைகிறது என கண்காணிக்கப்படுகிறது. அது உள்வரும் பாதையைக் கணித்து ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவலை அனுப்புகிறது. இது ராக்கெட்டின் பாதை, வேகம் மற்றும் அது தீர்மானித்துள்ள இலக்கைக் கண்டறிய விரைவான மற்றும் சிக்கலான கணக்கீடுகளை செய்கிறது.

இந்த ரேடார் தொழில்நுட்பம் நகர்ப்புறங்களை அடையக்கூடிய ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளையும், இலக்கை தவறவிடும் ஏவுகணைகளையும் வேறுபடுத்த முயல்கிறது. எவை இடைமறிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த பாதுகாப்பு அமைப்பு பின்னர் தீர்மானிக்கிறதாம்.

உள்வரும் ராக்கெட் மக்கள் வசிக்கும் பகுதி அல்லது முக்கிய இடத்தை நோக்கிச் சென்றால், இந்த பாதுகாப்பு அமைப்பு உள்வரும் ஆபத்துகளை முறியடிக்க எதிர் ஏவுகணை ஒன்றைச் செலுத்துகிறது. இதன் மூலம் உள்வரும் ராக்கெட் தனது இலக்கை அடையும் முன்னரே அழிக்கப்பட்டு அச்சுறுத்தல் முறியடிக்கப்படுகிறதாம்.

எதிர் ஏவுகணைகள் நகரும் அல்லது நிலையான அலகுகளிலிருந்து செங்குத்தாக ஏவப்பட்டு பின்னர் அந்த உள்வரும் ஏவுகணைகளை வானிலேயே வெடிக்கச் செய்கின்றனவாம்.

ஒரு பேட்டரி மூன்று அல்லது நான்கு லாஞ்சர்களைக் கொண்டுள்ளது. இதே போல் இஸ்ரேலில் குறைந்தது 10 பேட்டரிகள் உள்ளன. இதுவரை 2,000க்கும் மேற்பட்ட உள்வரும் ஆபத்துகளை இந்த பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அயர்ன் டோமின் தேவை உருவானது என்றாலும் அதுவும் தோல்வியிலே முடிந்ததாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *