இந்தியா-பாகிஸ்தான் போட்டி; தாக்குதல் மிரட்டல் விடுத்தவர் கைது
குஜராத்தின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 14ஆம் திகதி நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், அவ்வரங்கில் தாக்குதல் நடத்தவிருப்பதாக மின்னஞ்சல் வழியாக மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை குஜராத் காவல்துறை கைதுசெய்துள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் அந்த நபர் பிடிபட்டார். அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் எந்தக் குற்றப் பின்னணியும் கொண்டிராதவர் என்றும் காவல்துறை விளக்கியது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளன்று, குஜராத் காவல்துறையினர், தேசியப் பாதுகாப்புப் படையினர் உட்பட 11,000க்கும் மேற்பட்டோர் அகமதாபாத்திலும் மோடி விளையாட்டரங்கிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.