CT ஸ்கேன் சேவை இடைநிறுத்தம் – சிறுவர் வைத்தியசாலையில் நெருக்கடி
பொறளை – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் கடந்த இரண்டு வருடங்களாக புதுப்பிக்கப்படாமை காரணமாக இயந்திரத்தின் பராமரிப்பு பணிகளில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, CT ஸ்கேன் இயந்திரத்தின் மின்கல அமைப்பிற்கான மாற்று முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு சில நாட்களில் இயந்திரத்தினை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.