வவுனியாவில் விபத்து – விசேட அதிரடிப் படையினர் இருவர் உயிரிழப்பு
வவுனியா – ஹொரவபொத்தானை வீதியின் முதலாம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாடுகந்த முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயணித்த டிபென்டர் வாகனமே நேற்று (09) இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பகுதியில் வீதியைக் கடந்து சென்ற மாடு ஒன்றின் மீது மோதியதன் பின்னர் டிபென்டர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மற்றும் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.