வீதி விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 10 மாதங்களில் 1,638 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்துகளில் 1,733 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் அதிகளவானவர்கள் பாதசாரிகள் எனவும், குறித்த விபத்துகளில் 540 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 543 பேர் மோட்டார் சைக்கிள் செலுத்தினார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், வீதியில் பயணிக்கும் பொது மக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சாரதிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில் பாதசாரிகளின் அலட்சியம் காரணமாகவும் விபத்து நேர்ந்துள்ளது எனவும், பாதசாரிகள் வீதிகளில் அவதானமாக செல்லுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.