ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்போம்!
நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசானாக ஆரசிரியர்கள் விளங்குகின்றனர். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே.
ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து தனது, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் தான் திகழ்கின்றனர்.
இந்நிலையில் அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 5ஆம் திகதியை, நாம் சர்வதேச ஆசிரியர் தினமாக உலகலாவிய ரீதியில் கொண்டாடி வருகிறோம்.
ஆனால், இலங்கையை பொருத்தவரையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியரின் பணி அல்ல. அவற்றையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும்.
இதன் அடிப்படை கூறுகளாக ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவற்றைக் கூறலாம். இப்பணியைச் செய்வதற்கு தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராகவும் செயல்பட வேண்டும்.
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் தான் இந்த தினம் விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செயதியில்,
தற்போதுள்ள சவால்களை எதிர்கொண்டு பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்காக போராடும் நாட்டிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் அதேநேரம், ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உயரிய அந்தஸ்த்தை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்பாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.