இலங்கையில் 10 பேரில் 6 பேர் பொருளாதார அபாய வலயத்தில்!
இலங்கையில் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு கூட்டத்திலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும் பல பரிமாண இடர் குறியீட்டின் அடிப்படையில் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு நேற்று பாராளுமன்ற வளாகத்தில் அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
இந்தக் கூட்டத்தின்போதே ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் ஒவ்வொரு 10 பேரில் 6 பேர் அபாயகரமான பொருளாதர நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 55.7 வீதமானவர்கள் அபாயகரமான பொருளாதர நிலையை எட்டியுள்ளதுடன், இந்த நிலைமையானது கிராமப்புறங்களில் 82 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, கொடுப்பனவு சமநிலை நெருக்கடி மற்றும் கடன் பொறுப்புகள் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் நாட்டில் 10 பேரில் 6 பேர் அபாய வலயத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிலை எதிர்வரும் ஒரு வருடத்தில் 10 பேரில் 8 பேராக அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான முறையான மற்றும் வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.