ஊழல் நிறைந்த ஆட்சியால்தான் IMF கடன் தவணை கிடைக்கவில்லை;

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிதான் இன்றும் நம் நாட்டில் நடந்து வருகின்றது.இதனால் தான் IMF இரண்டாவது கடன் தவணை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் இரண்டாம் கடன் தவணையை செலுத்தாதது தொடர்பாக நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் நேற்று (03) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டாவது கடன் தவணை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்கள் சரியான முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளன .

இத்திட்டத்தை உரிய திறனுடன் நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதால் இரண்டாவது தவணைக்கான குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் வருமான இலக்குகளை அடைய வேண்டும் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பது தொடர்பான அரச நிர்வாகத்துடன் தொடர்புடைய இலக்குகளை அடைய வேண்டும். இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தாம் வினவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிர்வாக பிழைகள் சார்ந்த அறிக்கையின் பிரகாரம், இந்நாட்டில் ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் மத்தியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிகாரம் குவிகிறது.

பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி போன்றவற்றால் நாடு வங்குரோத்தடைந்து விட்டது. இந்நாட்டில் இன்னமும் ஊழல் மிகு குடும்ப ஆட்சியின் நீட்சியே நடந்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம், பொதுநலன் சார் பணிகள் சரிந்து, ஊழல் எதிர்ப்புத் திட்டம் இல்லாது, சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகம் கூட பலவீனமடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை நிபந்தனைகளில்,பூர்த்தி செய்யப்பட்ட நிபந்தனைகள் மற்றும் பூர்த்தி செய்யத் தவறிய நிபந்தனைகள் யாது என தாம் வினவுவதாகவும்” சஜித் பிரேதமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *