இந்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் பல ஆண்டு காலமாய் பெருமை சேர்ப்பவை. 2021ம் ஆண்டுக்கான அந்த விருதுகள் இன்று (ஆக., 24) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
2021ம் ஆண்டு தேசிய விருதுகளுக்கான போட்டியில் பல மொழிப் படங்கள் போட்டியிடுகின்றன. 2021ம் ஆண்டைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் “ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை” ஆகிய படங்கள் முக்கியமான படங்களாகப் பார்க்கப்படுகிறது. அப்படத்தில் நடித்தவர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சில பல விருதுகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் புஷ்பா படம் போட்டியில் இருக்கலாம். ஹிந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் இல்லை. சூர்யவன்ஷி, 83 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டில் வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. தரமான படங்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படமும் வரவில்லை.
எனவே, தமிழ்த் திரையுலகத்திற்கு இந்த வருடம் கூடுதல் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. அதேப்போல் இயக்குனர்களில் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். எது எப்படியோ யாருக்கு விருது என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.